ஸ்ரீ ராமானுஜர்

ramanuja

 

 

 

ராமானுஜ நூற்றந்தாதி

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்தது முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் பொன்னங் கழற்கமலப் போதிரண்டும்,-என்னுடைய

சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க் கென்னுக் கடவுடையேன் யான் ! கட்டளைக் கலித்துறை நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால், சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,

உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது, ஓங்கும் அன்பால் இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே ! சொல்லின் தொகைகொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும், நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம் வெல்லும் பரம, இராமானுச ! இதென் விண்ணப்பமே.

 

  1. பூமன்னுமாது பொருந்திய மார்பன், புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன், பல்கலையோர் தாம்மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம் நாம்மன்னிவாழ, நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே.
  2. கள்ளார்பொழில்தென்னரங்கன், கமலப்பதங்கள் நெஞ்சிற் கொள்ளாமனி சரைநீங்கிக், குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென்னெஞ்சு, ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.
  3. பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப் பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப், பொருவருஞ்சீர் ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும் சீரியபேறுடையார், அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.
  4. என்னைப் புவியில் ஒருபொருளாக்கி, மருள்சுரந்த முன்னைப்பழவினை வேரறுத்து, ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன் பரன்பாதமுமென் சென்னித் தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே,
  5. எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று, இசையகில்லா மனக்குற்றமாந்தர் பழிக்கில் புகழ், அவன்மன்னியசீர் துதிக்கும் பரமன், இராமானு இனக்குற்றம்காண கில்லார், பத்திஏய்ந்த இயல்விதென்றே.
  6. இயலும் பொருளும் இசைத்தொடுத்து, ஈன்கவிகளன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை, மதியின்மையால் பயிலும் கவிகளில் பத்தியில்லாத வென்பாவி நெஞ்சால் முயல்கின்றனன், அவன்றன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.
  7. மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்சமுக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின், பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ்பாடியல்லா வழியைக் கடத்தல், எனக்கினியாதும் வருத்தமன்றே.
  8. வருத்தும் புறவிருள்மாற்ற, எம்பொய்கைப் பிரான்மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி, ஒன்றத் திரித்தன் றெரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே இருத்தும் பரமன், இராமானுசனெம் இறையவனே.
  9. இறைவனைக் காணும் இதயத்திருள்கெட, ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள், நெஞ்சத்துறையவைத்தாளும் இராமானுசன் புகழ்ஓதும் நல்லோர் மறையினைக்காத்து, இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே.
  10. மன்னிய பேரிருள் மாண்டபின், கோவலுள்மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும், தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசற்கன் புபூண்டவர்தாள் சென்னியிற்சூடும், திருவுடையாரென்றும் சீரியரே.
  11. சீரிய நான்மறைச் செம்பொருள், செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள், சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்றனைச் சார்ந்தவர்தம் காரியவண்மை, என்னால் சொல்லொணாதிக் கடலிடத்தே.
  12. இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன், இணையடிப்போ தடங்கும் இதயத்திராமானுசன், அம்பொற்பாதமென்றும் கடங்கொண்டிறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல் செய்யாத் திடங்கொண்ட ஞானியர்க்கே, அடியேனன்பு செய்வதுவே.
  13. செய்யும் பசுந்துளவத் தொழில்மாலையும், செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ்மாலையும், பேராதசீரரங்கத் தையன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியா மெய்யன், இராமானுசன் சரணேகதி வேறெனக்கே.
  14. கதிக்குப்பதறி, வெங்காளமும் கல்லும் கடலுமெல்லாம் கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற்றேன், கொல்லிகாவலன் சொல் பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன், இராமானுசனென்னைச் சோர்விலனே.
  15. சோராதகாதல் பெருஞ்சுழிப்பால், தொல்லை மாலையொன்றும்பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும், பான்மையன்தாள் பேராதவுள்ளத் திராமானுசன்றன் பிறங்கியசீர் சாராமனி சரைச்சேரேன், எனக்கென்ன தாழ்வினியே.
  16. தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து, தலமுழுதும் கலியே ஆள்கின்ற நாள்வந்தளித்தவன் காண்மின், அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்றவள்ளல், இராமானுசனென்னும் மாமுனியே.
  17. முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக், கலைபரவும் தனியானையைத் தண்டமிழ் செய்த நீலன்றனக் குலகில் இனியானை, எங்கள் இராமானுசனை வந்தெய்தினரே.
  18. எய்தற்ரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால் செய்தற்குலகில் வரும் சடகோபனைச், சிந்தையுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர்சீரை உயிர்களெல்லாம் உய்தற்குதவும், இராமானுசனெம் உறுதுணையே.
  19. உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும், உயர்குருவும் வெறிதரு பூமகள் நாதனும், மாறன் விளங்கியசீர் நெறிதரும் செந்தமிழ் ஆரணமேயென்றிந் நீணிலத்தோர் அறிதரநின்ற, இராமானுசனெனக் காரமுதே.
  20. ஆரப்பொழில் தென்குருகைப் பிரான், அமுதத்திருவாய் ஈரத்தமிழின் இசையுணர்தோர்கட்கு, இனியவர்தம் சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள்நாத முனியை நெஞ்சால் வாரிப்பருகும், இராமானுசனென்றன் மாநிதியே.
  21. நிதியைப் பொழியும் முகிலென்று, நீசர்தம் வாசல்பற்றித் துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்தூய் நெறிசேர் எதிகட்கிறைவன்யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய, இராமானுசனென்னைக் காத்தனனே.
  22. கார்த்திகையானும் கரிமுகத்தானும், கனலும்முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு, மூவுலகும் பூத்தவனே ! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த திர்த்தனையேத்தும், இராமானுசனென்றன் சேமவைப்பே.
  23. வைப்பாயவான் பொருளென்று, நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசனை, இருநிலத்தில் ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்சநெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன், என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே.
  24. மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும்மூத்து, அதனால் எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன் பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்கைத்தமெய்ஞ்ஞானத்து, இராமானுசனென்னும் கார்தன்னையே.
  25. காரேய்கருணை இராமானுச இக்கடலிடத்தில் ஆரேயறிபவர் நின்னருளின் தன்மை, அல்லலுக்கு நேரேயுறை விடம் நான் வந்த நீ யென்னை உய்த்தபினுன் சீரேயுயிர்க்குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.
  26. திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என்செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கியமேகத்தை, மேவும்நல்லோர் எக்குற்றவாளர் எதுபிறப்பேதியல்வாக நின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு, அவ்வியல்வே நம்மையாட் கொள்ளுமே.
  27. கொள்ளக் குறைவற்றிலங்கிக், கொழுந்து விட்டோங்கியவுன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம்நீ புகுந்தாய், வெள்ளைச் சுடர்விடும் உன்பெருமேன்மைக் கிழுக்கிதென்று தள்ளுற் றிரங்கும், இராமானுச ! என்தனிநெஞ்சமே !
  28. நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்தநிமலன், நங்கள் பஞ்சித் திருவடிப்பின்னை தன்காதலன், பாதம்நண்ணா வஞ்சர்க்கரிய இராமானுசன் புகழ் அன்றியென்வாய் கொஞ்சிப் பரவகில் லாது, என்னவாழ்வின்று கூடியதே !
  29. கூட்டும்விதியென்று கூடுங்கொலோ, தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னைத், தன்பத்தியென்னும் வீட்டின் கண்வைத்த இராமானுசன் புகழ்மெய்யுணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை, என்நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே.
  30. இன்பந்தரு பெருவீடுவந்தெய்திலென்? எண்ணிறந்த துன்பந்தருநிரயம் பலசூழிலென்? தொல்லுலகில் மன்பல்லுயிர்கட்கிறையவன் மாயன் எனமொழிந்த அன்பன் அனகன், இராமானுசனென்னை ஆண்டனனே.
  31. ஆண்டுகள் நாள்திங்களாய், நிகழ்கால மெல்லாம்மனமே ! ஈண்டு பல்யோனிகள் தோறுழல்வோம், இன்றோரெண்ணின்றியே காண்டகுதோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்ப் பூண்டவன்பாளன், இராமானுசனைப் பொருந்தினமே.
  32. பொருந்திய தேசும் பொறையும் திறலும்புகழும், நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும், செறுகலியால் வருந்தியஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன், எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.
  33. அடையார் கமலத்தலர் மகள்கேள்வன், கையாழியென்னும் படையோடு நாந்தகமும் படர்தண்டு மொண்சார்ங்கவில்லும் புடையார் புரிசங்கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று, இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே.
  34. நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை, நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை, என்பெய்வினைதென் புலத்தில் பொறித்தவப் புத்தகச்சும்மை பொறுக்கியபின் நலத்தைப் பொறுத்தது, இராமானுசன்றன் நயப்புகழே.
  35. நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே, சிலமானிடத்தைப் புயலே எனக் கவிபோற்றி செய்யேன், பொன்னரங்கமென்னில் மயலேபெருகும் இராமானுசன் மன்னு மாமலர்த்தாள், அயரேன், அருவினை என்னையெவ்வாறின்றடர்ப்பதுவே?
  36. அடல்கொண்ட நேமியன் ஆருயிர்நாதன், அன்றாரணச்சொல் கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப்பப், பின்னும்காசினியோர்இடரின் கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின் படரும்குணன், எம்இராமானுசன்றன் படியிதுவே.
  37. படிகொண்ட கீர்த்தி இராமாயண மென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசன் குணங்கூறும், அன்பர் கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்துள்ளங்கனியும் நல்லோர் அடிகண்டு கொண்டுகந்து, என்னையும் ஆளவர்க்காக்கினரே.
  38. ஆக்கியடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே போக்கிப்புறத் திட்டதென் பொருளாமுன்பு. புண்ணியர்தம் வாக்கிற்பிரியா இராமானுச ! நின் அருளின்வண்ணம் நோக்கில் தெரிவரிதால், உரையாயிந்த நுண்பொருளே.
  39. பொருளும் புதல்வரும் பூமியும், பூங்குழலாருமென்றே மருள் கொண்டிளைக்கும் நமக்கு நெஞ்சே ! மற்றுளார்தரமோ? இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன்ஈறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்து, இராமானுசன் செய்யும் சேமங்களே.
  40. சேமநல்வீடும் பொருளும் தருமமும், சீரியநற்காமமும் என்றிவைநான் கென்பர்; நான்கினும் கண்ணனுக்கே ஆமதுகாமம் அறம்பொருள் வீடிதற்கென்றுரைத்தான் வாமனன் சீலன், இராமானுசனிந்த மண்மிசையே.
  41. மண்மிசை யோனிகள் தோறும்பிறந்து, எங்கள் மாதவனே கண்ணுறநிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன் வந்துதோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற்காயினரே.
  42. ஆயிழையார் கொங்கைதங்கும் அக்காதல் அளற்றழுந்தி மாயுமென் ஆவியைவந்தெடுத்தானின்று; மாமலராள் நாயகன் எல்லாவுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் தூயவன், தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே.
  43. சுரக்கும் திருவும் உணர்வும், சொலப்புகில் வாயமுதம் பரக்கும் இருவினைபற்றறவோடும், படியிலுள்ளீர் ! உரைக்கின்றனனு மக்கியானற<ஞ்சீறும் உறுகலியைத் துரக்கம் பெருமை, இராமானுசனென்று சொல்லுமினே.
  44. சொல்லார் தமிழொருமூன்றும், சுருதிகள் நான்கு மெல்லை இல்லா அறநெறியாவும் தெரிந்தவன், எண்ணருஞ்சீர் நல்லார்பரவும் இராமானுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர், எதுபேறென்றுகாமிப்பரே.
  45. பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி, அப்பேறளித்தற்காறொன்றுமில்லை மற்றைச் சரண்அன்றி, என்றிப்பொருளைத் தேறுமவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மை சொல்லால் கூறும்பரமன்று, இராமானுச ! மெய்ம்மைகூறிடிலே.
  46. கூறும்சமயங்கள் ஆறும்குலையக், குவலயத்தே மாறன் பணித்தமறையுணர்ந்தோனை, மதியிலியேன் தேறும்படியென் மனம் புகுந்தானைத் திசையனைத்தும் ஏறும்குணனை, இராமானுசனை இறைஞ்சினமே.
  47. இறைஞ்சப்படும்பரன் ஈசன் அரங்கனென்று, இவ்வுலகத் தறம்செப்பும் அண்ணல் இராமானுசன், என் அருவினையின் திறம்செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே!.
  48. நிகரின்றி நின்றவென்நீ சதைக்கு, நின்னருளின்கணன்றிப்புகலொன்றுமில்லை அருட்குமஃமேபுகழ், புன்மையிலோர்பகரும் பெருமை இராமானுச ! இனிநாம்பழுதே அகலும்பொருளென், பயனிருவோமுக்கு மானபின்னே?.
  49. ஆனதசெம்மை அறநெறி, பொய்ம்மை அறுசமயம் போனது பொன்றியிறந்தது வெங்கலி, பூங்கமலத்தேனதி பாய்வயல் தென்னரங்கன் கழல்சென்னிவைத்துத்தானதில்மன்னும், இராமானுசனித்தலத்துதித்தே.
  50. உதிப்பனவுத்தமர்சிந்தையுள், ஒன்னலர் நெஞ்சமஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன, கொள்ளைவன் குற்றமெல்லாம் பதித்தவென்புன் கவிப்பாவினம் பூண்டனபாவு தொல்சீர் எதித்தலை நாதன், இராமானுசன்றன் இணையடியே.
  51. அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய், அன்றுபாரதப் போர் டியப்பரிநெடுந்தேர் விடுங்கோனை, முழுதுணர்ந்த அடியர்க்கமுதம் இராமானுசனென்னை ஆளவந்திப்படியிற்பிறந்தது, மற்றில்லை காரணம் பார்த்திடிலே.
  52. பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப, இப்பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து தீர்த்தான் இருவினை தீர்த்தரங்கன் செய்யதாளிணையோடார்த்தான், இவையெம் இராமானுசன் செய்யும் அற்புதமே.
  53. அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆளவந்த கற்பகம் கற்றவர்காமுறுசீலன், கருதரிய பற்பல்லுயிர்களும் பல்லுலகியாவும் பரனதென்னும் நற்பொருள் தன்னை, இந்நானிலத் தேவந்து நாட்டினனே.
  54. நாட்டியநீசச்சமயங்கள் மாண்டன, நாரணனைக் காட்டியவேதம் களிப்புற்றது, தென்குருகைவள்ளல் வாட்டமிலா வண்டமிழ் மறைவாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டியசீலத்து, இராமானுசன்றன் இயல்வுகண்டே.
  55. கண்டவர்சிந்தைகவரும், கடிபொழில் தென்னரங்கன் தொண்டர்குலாவும் இராமானுசனைத், தொகையிறந்த பண்டருவேதங்கள் பார்மேல் நிலவிடப்பார்த்தருளும் கொண்டலைமேவித் தொழும், குடியாமெங்கள் கோக்குடியே.
  56. கோக்குலமன்னரை மூவெழுகால், ஒருகூர்மழுவால் போக்கிய தேவனைப் போற்றும்புனிதன், புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமானுசனை அடைந்தபின் என்வாக்குரையாது, என்மனம் நினையாதினி மற்றொன்றையே.
  57. மற்றொரு பேறுமதியாது, அரங்கன் மலரடிக்காள் உற்றவரே தனக்குற்றவராக் கொள்ளும் உத்தமனை, நற்றவர் போற்றும் இராமானுசனையிந் நானிலத்தே பெற்றனன், பெற்றபின் மற்றறியேனொரு பேதைமையே.
  58. பேதையர்வேதப் பொருளிதென்றுன்னிப், பிரமம்நன்றென்றோதி மற்றெல்லா உயிரும் அஃதென்று, உயிர்கள் மெய்விட்டாதிப்பரனொ டொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் வாதில்வென்றான், எம்இராமானுசன் மெய்ம்மதிக்கடலே.
  59. கடலளவாயதிசையெட்டினுள்ளும், கலியிருளே மிடைதருகாலத்திராமானுசன், மிக்கநான் மறையின் சுடரொளியாலவ் விருளைத் துரந்திலனேல் உயிரை உடையவன், நாரணன் என்றறிவாரில்லை உற்றுணர்ந்தே.
  60. உணர்ந்தமெய்ஞ் ஞானியர்யோகந் தொறும், திருவாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும், மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும்புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல், இராமானுசனெங் குலக்கொழுந்தே.
  61. கொழுந்து விட்டோடிப்படரும் வெங்கோள்வினையால், நிரயத் தழுந்தியிட்டேனை வந்தாட் கொண்டபின்னும், அருமுனிவர் தொழுந்தவத்தோனெம் இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்கெழுந்தது, அத்தால் நல்லதிசயங்கண்ட திருநிலமே.
  62. இருந்தேன் இருவினைப்பாசம் கழற்றி, இன்றியான் இறையும் வருந்தேன் இனியெம் இராமானுசன், மன்னுமாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க் கொன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப்பரவும், பெரியோர்தம்கழல் பிடித்தே.
  63. பிடியைத்தொடரும் களிறென்ன, யானுன் பிறங்கியசீர் அடியைத் தொடரும்படி நல்கவேண்டும், அறுசமயச்செடியைத் தொடரும்மருள் செறிந்தோர் சிதைந்தோடவந்திப்படியைத்தொடரும், இராமானுச ! மிக்கபண்டிதனே.
  64. பண்டருமாறன் பசுந்தமிழ், ஆனந்தம்பாய்மதமாய் விண்டிடஎங்கள் இராமானுச முனிவேழம், மெய்ம்மை கொண்டநல்வேதக் கொழுந்தண்ட மேந்திக்குவலயத்தே மண்டி வந்தேன்றது, வாதியர்காள் ! உங்கள் வாழ்வற்றதே.
  65. வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர்தம் தாழ்வற்றது தவம்தாரணி பெற்றது, தத்துவநூல் கூழற்றதுகுற்ற மெல்லாம்பதித்த குணத்தினர்க்கந்நாழற்றது, நம்இராமானுசன் தந்த ஞானத்திலே.
  66. ஞானம்கனிந்த நலங்கொண்டு, நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன், வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கத்தானம் கொடுப்பது, தன்தகவென்னும் சரண்கொடுத்தே.
  67. சரணம் அடைந்ததருமனுக்காப், பண்டுநூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன், தன்னை வணங்கவைத்த கரணம் இவையுமக்கன்றென்றி ராமானுசனுயிர்கட்(கு) அரணங்க மைத்திலனேல், அரணார் மற்றிவ்வாருயிர்க்கே?
  68. ஆரெனக்கின்று நிகர்சொல்லின், மாயனன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின், செம்மைப் பொருள் தெரியப் பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினிற்சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.
  69. சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து, முன்னாள் அந்தமுற்றாழ்ந்தது கண்டு, அவைஎன்றனக் கன்றருளால் தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து,எந்தை இராமானுசன், வந்தெடுத்தனன் இன்றென்னையே.
  70. என்னையும் பார்த்தென் இயல்வையும்பார்த்து, எண்ணில் பல்குணத்த உன்னையும் பார்க்கில் அருள்செய்வதேநலம், அன்றியென்பால் பின்னையும் பார்க்கில்நலமுளதே? உன்பெருங்கருணை தன்னையென் பார்ப்பர், இராமானுச ! உன்னைச்சார்ந்தவரே.
  71. சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக்கீழ், அன்புதான் மிகவும் கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு, உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினைநீ செய்வினையதனால் பேர்ந்தது, வண்மைஇராமானுச ! எம்பெருந்தகையே.
  72. கைத்தனன் தீயசமயக்கலகரைக், காசினிக்கே உய்ந்தனன் தூயமறை நெறிதன்னை, என்றுன்னியுள்ளம் நெய்த்தவன் போடிருந்தேத்தும் நிறைபுகழோருடனே வைத்தனன் என்னை, இராமானுசன் மிக்கவண்மை செய்தே.
  73. வண்மையினாலுந்தன் மாதகவாலும், மதிபுரையும் தண்மையினாலுமித்தாரணியோர்கட்குத், தான்சரணாய் உண்மைநன் ஞானம் உரைத்த இராமானுசனையுன்னும் திண்மையல்லாலெனக்கில்லை, மற்றோர்நிலைதேர்ந்திடிலே.
  74. தேரார்மறையின் திறமென்று, மாயவன் தீயவரைக் கூராழிகொண்டு குறைப்பது, கொண்டல் அனையவண்மை ஏரார்குணத்தெம் இராமானுசனவ் வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது, அப்போதொரு சிந்தைசெய்தே.
  75. செய்த்தலைச்சங்கம் செழுமுத்தம்ஈனும், திருவரங்கர் கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி, நங்கண்முகப்பே மொய்த்தலைத்ன்னைவிடேனென்றிருக்கிலும் நின்புகழே மொய்த்தலைக்கும் வந்து, இராமானுச ! என்னைமுற்றுநின்றே.
  76. நின்றவண் கீர்த்தியும்நீள் புனலும், நிறைவேங்கடப்பொற் குன்றமும் வைகுந்தநாடும் குலவிய பாற்கடலும், உன்றனக் கெத்தனை இன்பந்தரும் உன் இணைமலர்த்தாள் என்றனக்கும் அது, இராமானுச ! இவையீந்தருளே.
  77. ஈந்தனன் ஈயாத இன்னருள், எண்ணில் மறைக்குறும்பைப் பாய்ந்தனன் அம்மறைப் பல்பொருளால், இப்படியனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியினாலென் வினைகளை வேர்பறியக் காய்ந்தனன், வண்மை இராமானுசற்கென் கருத்தினியே?
  78. கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம்கழற்றிக், கருதரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து, நீயிந்தமண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கியபின்னென்னெஞ்சில் பொருத்தப்படாது, எம்இராமானுச ! மற்றொர் பொய்ப்பொருளே.
  79. பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து, இந்தப் பூதலத்தே மெய்யைப்புரக்கும் இராமானுசன்நிற்க, வேறுநம்மை உய்யக்கொளவல்ல தெய்வமிங்கியா தென்றுலர்ந்தவமே ஐயப்படா நிற்பர், வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே.
  80. நல்லார்பரவும் இராமானுசன், திருநாமம்நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள்யவர், அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும், சொல்லால் மனத்தால் கருமத்தினால், செய்வன் சோர்வின்றியே.
  81. சோர்வின்றி உன்றன் துணையடிக்கீழ்த், தொண்டுபட்டவர்பால் சார்வின்றி நின்றஎனக்கு, அரங்கன் செய்யதாளிணைகள் பேர்வின்றியின்று பெறுத்தும் இராமானுச ! இனியுன் சீரொன்றிய கருணைக்கு, இல்லைமாறு தெரிவுறிலே.
  82. தெரிவுற்றஞானம் செறியப்பெறாது, வெந்தீவினையால் உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில் பொருவற்ற கேள்வியனாக்கி நின்றானென்ன புண்ணியனோ ! தெரிவுற்ற கீர்த்தி, இராமானுசனென்னும் சீர்முகிலே.
  83. சீர்கொண்டு பேரறம்செய்து, நல்வீடுசெறிது மென்னும் பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன், உன்பதயுகமாம் ஏர்கொண்ட வீட்டை எளிதினில்எய்துவன் உன்னுடைய கார்கொண்டவண்மை, இராமானுச ! இதுகண்டுகொள்ளே.
  84. கண்டுகொண்டேனெம் இராமானுசன்றன்னைக், காண்டலுமே தொண்டு கொண்டேன் அவன் தொண்டர்பொற்றாளில், என் தொல்லைவெந்நோய் விண்டுகொண்டேன் அவன்சீர் வெள்ளவாரியை வாய்மடுத்தின்(று) உண்டுகொண்டேன், இன்னம் உற்றனஓதில் உலப்பில்லையே.
  85. ஓதியவேதத்தின் உட்பொருளாய், அதன் உச்சிமிக்க சோதியைநாதன் எனவறியாதுழல்கின்ற தொண்டர்,பேதைமைதீர்த்த இராமானுசனைத் தொழும்பெரியோர் பாதமல்லாலென்றன் ஆருயிர்க்கு, யாதொன்றும் பற்றில்லையே.
  86. பற்றாமனிசரைப்பற்றி, அப்பற்றுவிடாதவரே உற்றாரெனவுழன்றோடிநையேனினி, ஒள்ளியநூல் கற்றார் பரவும் இராமானுசனைக் கருதுமுள்ளம் பெற்றார்யவர், அவரெம்மை நின்றாளும் பெரியவரே.
  87. பெரியவர்பேசிலும் பேதையர்பேசிலும், தன்குணங்கட்குரியசொல் என்றும்உடையவன் என்றென்று, உணர்வில்மிக்கோர் தெரியும்வண் கீர்த்தி இராமானுசன் மறைதேர்ந்துலகில் புரியநன்ஞானம், பொருந்தாதவரைப் பொரும்கலியே.
  88. கலிமிக்க செந்நெல்கழனிக்குறையல், கலைப் பெருமான் ஒலிமிக்க பாடலை உண்டுதன்னுள்ளம் தடித்து, அதனால் வலிமிக்கசீயம் இராமானுசன் மறைவாதியராம் புலிமிக்கதென்று, இப்புவனத்தில் வந்தமைபோற்றுவனே.
  89. போற்றருஞ்சீலத்திராமானுச, நின்புகழ்தெரிந்து சாற்றுவனேலது தாழ்வதுதீரில், உன்சீர்தனக்கோர் ஏற்றமென்றே கொண்டிருக்கிலுமென் மனம் ஏத்தியன்றி ஆற்றகில்லாது, இதற்கென்னினைவா யென்றிட்டஞ்சுவனே.
  90. நினையார் பிறவியை நீக்கும்பிரானை, இந்நீணிலத்தே எனையாளவந்த இராமானுசனை, இருங்கவிகள் புனையார் புனையும் பெரியவர்தாள்களில் பூந்தொடையல் வனையார், பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.
  91. மருள்சுரந்தாகமவாதியர்கூறும், அவப்பொருளாம் இருள்சுரந்தெய்த்த உலகிருள்நீங்கத், தன்ஈண்டியசீர்அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள்சுரந்தான், எம்இராமானுசன் மிக்கபுண்ணியனே.
  92. புண்ணியநோன்பு புரிந்துமிலேன், அடிபோற்றிசெய்யும் நுண்ணருங்கேள் விநுவன்றுமிலேன், செம்மைநூற்புலவர்க்கெண்ணருங் கீர்த்தி இராமானுச ! இன்றுநீபுகுந்தென் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும், நின்றவிக்காரணம் கட்டுரையே.
  93. கட்டப்பொருளை மறைப்பொருளென்று, கயவர்சொல்லும் பெட்டைக்கெடுக்கும் பிரானல்லனே, என்பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்னருள் என்னுமொள்வாளுருவி வெட்டிக்களைந்த, இராமானுசனென்னும் மெய்த்தவனே.
  94. தவந்தரும் செல்வும் தகவும்தரும், சரியாப்பிறவிப் பவந்தரும் தீவினைபாற்றித்தரும், பரந்தாமமென்னும் திவந்தரும்தீதில் இராமானுசன் தன்னைச்சார்ந்தவர்கட்(கு) உவந்தருந்தேன், அவன்சீரன்றியானொன்றும் உள்மகிழ்ந்தே.
  95. உண்ணின்றுயிர்களுக் குற்றனவே செய்து, அவர்க்குயவே பண்ணும் பரணும் பரிவிலனாம்படி, பல்லுயிர்க்கும் விண்ணின் தலைநின்று வீடளிப்பானெம் இராமானுசன் மண்ணில் தலத்துதித்து, உய்மறைநாலும் வளர்த்தனனே.
  96. வளரும்பிணி கொண்டவல்வினையால், மிக்கநல்வினையில் கிளரும் துணிவுகிடைத்தறியாது, முடைத்தலையூன் தளரும் அளவும்தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்(கு) உளரெம்இறைவர், இராமானுசன்றன்னை உற்றவரே.
  97. தன்னையுற்றாட் செய்யும்தன்மையினோர், மன்னுதாமரைத்தாள் தன்னையுற்றாட் செய்யஎன்னையுய்த் தானின்று, தன்தகவால் தன்னையுற்றாரன்றித் தன்மையுற்றாரில்லை என்றறிந்து தன்னையுற்றாரை, இராமானுசன்குணம் சாற்றிடுமே.
  98. இடுமே இனியசுவர்க்கத்தில், இன்னம்நரகிலிட்டுச் சுடுமேயவற்றைத் தொடர்தரு தொல்லைச், சுழல்பிறப்பில் நடுவேயினிநம் இராமானுசன் நம்மைநம் வசத்தே விடுமே சரணமென்றால், மனமே ! நையல்மேவுதற்கே.
  99. தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும், தாழ்சடையோன் சொற்கற்றசோம்பரும் சூனியவாதரும், நான்மறையும் நிற்கக்குறும்புசெய்நீசரும்மாண்டனர் நீணிலத்தே பொற்கற்பகம், எம்இராமானுசமுனி போந்தபின்னே.
  100. போந்ததென்னெஞ் சென்னும்பொன்வண்டு, உனதடிப்போதில் ஒண்சீர் ஆம்தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி, நின்பாலதுவே ஈந்திடவேண்டும் இராமானுச ! இது அன்றியொன்றும் மாந்தகில்லாது, இனிமற்றொன்று காட்டிமயக்கிடலே.
  101. மயக்கும் இருவினைவல்லியிற்பூண்டு, மதிமயங்கித்துயக்கும்பிறவியில் தோன்றியஎன்னைத், துயரகற்றி உயக்கொண்டு நல்கும்இராமானுச ! என்றதுன்னையுன்னி நயக்குமர்க்கிதிழுக்கென்பர், நல்லவர்என்றுநைந்தே.
  102. நையும் மனமுன் குணங்களை<உன்னி, என்நாவிருந்தெம் ஐயன்இராமானுசனென்றழைக்கும், அருவினையேன் கையும்தொழும் கண்கருதிடுங்காணக் கடல்புடைசூழ்வையம் இதனில், உன்வண்மையென் பாலென் வளர்ந்ததுவே?
  103. வளர்ந்தவெங்கோபமடங்கலொபன்றாய், அன்றுவாளவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன், கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமானுசனென்றன் மெய்வினைநோய் களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற்கனியென்னவே.
  104. கையிற்கனியென்னகண்ணனைக் காட்டித்தரிலும், உன்றன் மெய்யிற் பிறங்கியசீரன்றி வேண்டிலன்யான், நிரயத்தொய்யில் கிடக்கினும் சோதிவிண்சேரினும் இவ்வருள்நீ செய்யில்தரிப்பன், இராமானுச ! என்செழுங் கொண்டலே.
  105. செழுந்திரைப்பாற்கடல்கண்டுயில்மாயன், திருவடிக்கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில்மேவுநன்ஞானி, நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன் இராமானுசனைத் தொழும்பெரியோர் எழுந்திரைத்தாடும் இடம், அடியேனுக்கிருப்பிடமே.
  106. இருப்பிடம் வைகுந்தம்வேங்கடம், மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர், அவைதம் மொடும் வந்திருப்பிடம் மாயனி ராமானுசன்மனத்தின்றவன்வந் திருப்பிடம், என்றன் இதயத்துள்ளே தனக்கின்புறவே.
  107. இன்புற்ற சீலத்திராமானுச, என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து, எண்ணரிய துன்புற்றுவீயினும் சொல்லுவதொன்றுண்டு உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கியங்காட்படுத்தே.
  108. அங்கயல் பாய்வயல் தென்னரங்கன், அணி ஆகமன்னும் பங்கயமாமலர்ப் பாவையைப்போற்றதும், பத்தியெல்லாம் தங்கியதென்னத்தழைத்து நெஞ்சே ! நந்தலைமிசையே பொங்கியகீர்த்தி, இராமானுசனடிப்பூமன்னவே.
  109. (பூமன்னுமாது பொருந்தியமார்பன், புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன், பல்கலையோர் தாம்மன்ன வந்த இமாராமானுசன் சரணாரவிந்தம் நாம்மன்னிவாழ, நெஞ்சே சொல்வோமவன் நாமங்களே.)

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

 

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

 

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி